Sep 24, 2014

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா?

 




உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.
இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் உங்களது பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண் ஆகிய தகவல்களை தர வேண்டும்.
காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. திருடப்பட்ட உங்களது மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். உங்களது போன் உங்களுக்கு திரும்பி கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

Sep 19, 2014

குர்பானியின் சட்டங்கள்

بسم الله الرحمن الرحيم




 தொகுப்பு : அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி (பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்.)



   முன்னுரை

நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

குர்பானியின் பின்னணி

இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)

குர்பானியின் நோக்கம்

இந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)

குர்பானியின் சிறப்பு

குர்பானியின் சிறப்புப் பற்றி வரும் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமானவை. என்றாலும் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (5546)
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி (955)

யார்மீது கடமை?

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள்.

Sep 18, 2014

கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டா?


black_seed_healing-1

“கருஞ்சீரகத்தில் சாவைத் (மரணத்தைத்) தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ( ஆதாரம் புகாரி, 5688 முஸ்லிம் 4451 )
இதே கருத்தை தரக்கூடிய மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் 4452-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலே கருஞ்சீரகத்திலே நோய்க்கான நிவாரணம் இல்லாமல் இல்லை மரணத்தைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கருஞ்சீரகம் சம்பந்தப்பட்ட எல்லா ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டிவைகளே என்று இன்றைய நவீன கண்டுப்பிடிப்பாளர்கள் கூறிவருகிறார்கள்.
குர்ஆனுக்கு முரண் என்று ஆரம்பித்து இப்போது இந்த செய்தி நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று மறுக்குகிறார்கள்? கேன்சர் நோயாளிக்கு கருஞ்சீரகத்தை கொடுத்து நோயை இல்லாமல் காட்டுங்கள் என்று பகுத்தறிவு வாதம் பேசுகிறார்கள்.
புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று பார்த்தால் நபியவர்களால் மருத்துவம் சம்மந்தமாக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் மறுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும்.
ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலையில் உள்ளார்கள். எது இப்படியோ இக் கட்டரையை நிதானமாகவும் பக்கச்சார்பில்லாமலும் நடு நிலையோடு வாசித்திப் பாருங்கள், விளக்கம் பொருத்தம் என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
ஒரு நோயாளி வைத்தியரிடம் சென்று நீங்கள் தரும் மருந்தின் மூலம் நோய் உடனே குணமாக வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் பொய் டாக்டர், நீங்கள் தரும் மருந்தும் பொய் மருந்து என்று யாராவது கூறினால், உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்பார்கள்.
சில நேரங்களில் உடனே குணமாகலாம், சில நேரங்களில் ஒரு கிழமை ஆகலாம், ஒரு மாதமாகலாம், ஒரு வருடம் ஆகலாம், ஏன் அதிகமான காலம் நோயிலேயே இருக்கலாம். நோயிக்கான நூறு வீதம் சரியான மருந்தாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இருக்க வேண்டும்.
பின்வரும் ஹதீஸை கவனியுங்கள், ஒவ்வொரு நோயிக்கும் நிவாரணம் ஒன்று உண்டு நோயிக்குரிய நிவாரணம் சரியாக அமைந்து விட்டால் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் (குணம்) எற்ப்பட்டுவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4432 )
எவ்வளவு தான் மருந்து குடித்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் சரியாக இருக்கவேண்டும்.
மருந்தைப் பொருத்தவரை அது பாணி வகையாக இருக்கலாம் அல்லது மாத்திரையாக இருக்கலாம், அவைகள் பல கலவைகளால் தான் தயாரிக்கப் படுகிறது. அதுபோலகருஞ்சீரகம் ஏனைய மருந்து கலவைகளுடன் கலக்கப்பட்டு இன்று சந்தைகளில் விற்பனைகளில் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.
கருஞ்சீரகத்தால் தாயரிக்கப்பட்ட மாத்திரைகள் மற்றும் தைலங்கள், பாணிகள் மூலம் அதிகமான மக்கள் நிவாரணம் அடைந்து வருகிறார்கள்.
ஹதீஸுடைய பிரதிபலிப்பு சரியாகத்தானே உள்ளது. பிறகு ஏன் ஹதீஸ் புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்று எப்படி கூற முடியும்?
கருஞ்சீரகத்தை ஆய்வு செய்து இதில் நோய்க்கும் நிவாரணம் இல்லை என்று கண்டுப் பிடித்தீர்களா?
பொதுவாக எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும். நோய் முத்திவிட்டது என்றால் மனிதன் மரணிக்கின்ற வரை மருந்தோடு காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான். எனவே கென்சர் நோய்க்கு கருஞ்சீரகத்தை பயன்படுத்தி நோயை குணப்படுத்தினால் தான் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வோம் இல்லாவிட்டால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்வது தனது அறிவீனத்தை உறுதிப் படுத்துகிறது. கென்சர் ஆரம்பத்திலே கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான மருந்தைக் கொடுத்து நோயை கட்டுப்படுத்தி விடுகிறார்கள். நோய் முத்திவிட்டது என்றால், அதற்காக கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்தே வேலை செய்யாமல் கடைசி வரை அதே நோயிலே மரணிக்கும் நிலையை காண்கிறோம். எனவே கருஞ்சீரகத்தைப் பொருத்தவரை இன்று பல நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் சொல்வது போல நடைமுறைப் படுத்தியப் பின்தான் அதுவும் குணமானால்தான் என்றால், கீழ் வரும் வசனத்தை எப்படி புரிந்து கொள்வது? அல்லாஹ் குர்ஆனில் 16 ம் அத்தியாயம் 68, 69,ம் வசனங்களில்
….. அதில் மனிதர்களுக்கு (நோயிக்கான) நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது தேனில் நிவாரணம் உண்டு
என்கிறான். இப்போது ஒரு நோயாளிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமானால் தான் இந்த குர்ஆன் வசனத்தை ஏற்றுக் கொள்வோம், நிரூபித்துக் காட்டுங்கள்? என்று இந்த குர்ஆன் வசனத்தை அணுகுவதா? நபி (ஸல) அவர்களின் காலத்தில் வயிற்று வலியால் துடித்த ஒருவருக்கு தேன் குடிக்க கொடுக்கப்பட்டு நிவாரணம் பெற்ற செய்தியை புகாரி 5684-ல் காணலாம்.
ஒரு வயிற்று வலி நோயாலிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமாகா விட்டால் இந்த குர்ஆன் வசனத்தை நிராகரிப்பதா? அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா? இவர்கள் கூறுவது போல முடி வெடுத்தால் இது போல பல குர்ஆன் வசனங்ளை நிராகரிக்க வேண்டி வரும்? நவூது பில்லாஹ் அல்லாஹ நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
இன்று அதிகமான மருந்துகளில் தேனும் ஒரு மருந்தாக சேர்க்கப்படுகிறது. எனவே எங்கள் தலைவர் இதை வாபஸ் வாங்குகின்ற வரை நாங்களும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று மார்க்கத்தில் பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
நடை முறைப் படுத்திவிட்டு தான் ஒரு ஹதீஸை ஏற்றும்கொள்வோம் என்றால் பின் வரும் ஹதீஸ்ளை எப்படி ஏற்றுக்கொள்வது?
வலியுள்ள இடத்தில் கை வைத்து 3 தடவைகள் பிஸ்மியும், 7 தடவைகள் அவூது பில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரிமா அஜிது வ அஹாதிரு என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4430 ) இந்த ஹதீஸின்படி ஒருவருக்கு வலியுள்ள இடத்தில் கை வைத்து இந்த துஆவை ஓதி வலி நீங்கா விட்டால் இந்த ஹதீஸுடைய நிலை என்ன? மேலும் காய்ச்சல் நரகத்தின் அனல் அதை தண்ணீரால் அணையுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 4443 ) காய்ச்சலில் உள்ளவர் தண்ணீரைப் பயன் படுத்துகிறார் குணம் கிடைக்கவில்லை இந்த ஹதீஸின் நிலை என்ன? எப்படி விளங்க வேண்டும்? சின்ன பிள்ளைகளுக்கு கடுமையான காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து போனால் மருந்துக் கொடுப்பதோடு முதல் உதவி சிகிச்சையாக தண்ணீரில் புடவையை நனைத்து துடைக்கச் சொல்வதை காணலாம். அறிவுக்குப் பொருந்தவில்லை என்று ஸஹீஹான ஹதீஸை தட்டுவது புத்திசாலி கிடையாது.
அது போல சூரா பாதிஹாவை ஓதி விஷத்திலிருந்து நிவாரணம் பெற்ற ஹதீஸை புகாரியில் காணலாம். விஷக்கடிக்கு ஓதிப்பார்த்து குணமாகவில்லை என்றால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் தட்டவேண்டும் என்ற முடிவுக்கு வருவதா? பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா?
மேலும் “ (சமையல்) காளான் மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி 5708 )
கண் நோயுடைய ஒருவருக்கு களானின் சாறைக் குடிக்கக் கொடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால், இந்த ஹதீஸை தட்டுவதா? அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா? மேலும் ஒற்றைத் தலை வலிக்கு நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். ( புகாரி 5701 )
பொதுவாக குறுதி உறிஞ்சி எடுப்பதின் மூலம் நோயிக்கு நிவாரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பல ஹதீஸ்களை காணலாம். குறுதி உறிஞ்சி எடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால்? இந்த ஹதீஸ்களின் நிலை என்ன? எனவே இவர்கள் ஹதீஸை அணுகுவதுப் போல அணுகினால் மருத்துவம் சம்பந்தமாக சொல்லப் பட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டும். சிந்தியுங்கள் செயல்படுங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Translate